Wednesday 27 June 2012

தலைவலியோடு திருகுவலியும் - சிறுகதை




மாறனுக்குப் புது இடத்தில் படுத்தால் தூக்கம் வரவே வராது. ஆதலால் உறவினர் வீடு, விடுதி முதலியவற்றில் இரவு தங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவான். என்றாலும் சிலசமயம் முடியாமற் போய்விடும். 

அப்படித்தான் ஒரு நாள் வெளியூர் நண்பனின் இல்லத்தில் இராத் தங்கும் கட்டாயம் ஏற்பட்டது. 

"தனியறை, வசதியான படுக்கை, குளிரூட்டி எல்லாம் உண்டு; தூக்கம் நிச்சயம் வரும்" என நண்பன் உறுதியளித்தான். 

அவன் தெரிவித்தது தன்னுடைய நம்பிக்கையை. அந்த நம்பிக்கையால் வழக்கமான துன்பம் நேர்வதைத் தடுக்க இயலவில்லை. "பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது" என்ற கதைதான். 

சொந்தக்காரர் வீடாய் இருந்தாலும் தெருவுக்குப் போய் இயற்கைக் காற்றாடச் சிறிது நேரம் கழிக்கலாம். இங்கே அவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது; அவனது தங்கை வேறு இருக்கிறாள்; இந்தச் சூழ்நிலையில் அறையை விட்டு வெளியே போனால்? தவறான நோக்கம் கற்பித்துக் காலிப்பயல் பட்டம் சூட்டிவிடுவார்கள். 

நண்பனும் வசவுக்கு ஆளாவான். 

வேறென்ன செய்யலாம்? 

எதிலோ எப்போதோ படித்திருந்த யோசனைகளை அமல்படுத்த முடிவு செய்தான். 

"ஒரேயொரு பொருளை இடைவிடாமல் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தால் மனங்குவிந்து ஒருமுகப்பட்டுத் தூக்கம் வந்துவிடும்" 

ஒன்றின்மீது மட்டும் கவனஞ் செலுத்துவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது; சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று? 

"ஒன்றுமுதல் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அலுப்புத் தோன்றி உறங்கிவிடுவோம்" 

எண்ணினான்; 500 தாண்டிவிட்டது. தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை மனப்பான்மை ஏற்பட்டு விழிப்புணர்வை மிகுதிப்படுத்தியதுதான் கண்ட பலன்! 

தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் உண்டாகும் சலிப்பு உறக்கத்தைத் தரலாம். அறையில் பெட்டி இருந்தது. ஆனால் அகாலத்தில் தொடர் இல்லையே! 

எழுந்து விளக்கேற்றி அறையிலிருந்த நூல்களுள் ஒன்றை எடுத்தான். வாசிப்பு, "தூக்க மருந்து" என்பது மாணவப் பருவத்துப் பட்டறிவு. தொடக்கத்திலிருந்து வாசித்தால் சுவை ஏற்பட்டுத் தூக்கத்தை விரட்டக்கூடுமாதலால் பாதியைத் திறந்து படிக்கலானான்: 

"நள்ளிரவு. அவள் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தாள். எல்லாரும் தூங்குகிறார்கள் எள்ளளவும் கவலை இல்லாமல், நான் மட்டும் தனியாய், கண்விழித்துப் படிக்க வேண்டியிருக்கிறதே என்னும் எரிச்சலானது மனத்தின் ஒரு மூலையில் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டிருக்க, அவள் படித்தாள். 

சன்னல் பக்கத்தில் கருப்பு உருவம் ஒன்று தோன்றியது. கம்பிகளை ஒலியின்றி எளிதாய் வளைத்து மெதுவாய் உள்ளே இறங்கிற்று. 

கயல்விழியின் முதுகுக்குப் பின்னாலிருந்து அடிமேல் அடி வைத்து முன்னேறிய அந்த நெடிய உருவம் பையிலிருந்து கத்தியொன்றை உருவியது;  பளபள என்று மின்னிய புதுக் கத்தியை ஓங்கியவாறே நெருங்கியது. 

அருகில் வந்தாயிற்று; அவளது பிடரியில் சதக் என்று..." 

ஐயோ என அலறியேவிட்டான் மாறன். புத்தகத்தை எறிந்தான்; உடல் நடுங்கியது, இதயத் துடிப்பு காதில் கேட்டது; விளக்கை அணைக்கவும் அச்சம். சன்னலருகில் போய்க் கதவுகளை அவசரமாய் மூடினான். அந்த உருவம் இந்த அறையிலேயே இருக்குமோ என்ற விசித்திர ஐயம் அவனைக் கிடுகிடுக்க வைத்தது. 

இனி வருமோ தூக்கம்? புத்தகம் வாசித்ததால் புதிய சங்கடமாய்த் திகில் நிலை ஏற்பட்டது. 

அமைதி இழந்து படுக்கவும் பயந்து இரவு முழுதும் உட்கார்ந்தபடியே விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

 ************************************************************

4 comments:

  1. அருமையான விறுவிறுப்பான கதை அருமை .....ரசித்தேன் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. ஊக்கம் தரும் உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  3. உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete