Tuesday 23 April 2013

தும்மல்


கைக்குழந்தைகள் தும்மும்போது என் கொள்ளுப் பாட்டியார், "நூறு" என்பார்; அடுத்தடுத்துத் தும்மினால், " இருநூறு, முந்நூறு" என்று எண்ணுவார். 

தும்மும்போது வாழ்த்தவேண்டும், நூறு என்றால் நூறு வயது வாழவேண்டும் என்று அர்த்தம் என விளக்குவார். இது அறுபது ஆண்டுக்கு முன்பு; அவருக்குப் பின்பு வேறு யாரும் இப்படி  வாழ்த்தி நான் கேட்டறியேன்; அந்த வழக்கம் இன்னமும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது  தெரியவில்லை. ஆனால் அது மிகப் பழங் காலத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறது. பெரியவர்களையும் வாழ்த்தியிருக்கிறார்கள். 

நமக்குப் புரை ஏறினால், " யாரோ நம்மை நினைக்கிறார்கள்" என்கிறோம் அல்லவா? திருவள்ளுவர் காலத்தில், " எவராவது நம்மை நினைத்தால் நாம் தும்முவோம்" என நம்பினார்கள். 

தும்முகையில் வாழ்த்துதல், தும்மலுக்குக் காரணம் பிறர் நம்மை நினைத்தல் என்று எண்ணுதல் ஆகிய இரு செய்திகளையும் 1317 ஆம் குறள் தெரிவிக்கிறது: 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 

பொருள்: 

தும்மினேன் வழுத்தினாள் = நான் தும்மினேன், அவள் என்னை வாழ்த்தினாள் (நூறு என்று சொல்லியிருப்பாள் போலும்) 

அழுதாள் யார் உள்ளித் தும்மினீர் என்று = எவளோ உம்மை நினைத்தமையால் தும்மினீர்; யார் அவள் எனக் கேட்டு அழுதாள். 

தன் காதலனை வேறு ஒருத்தி மனத்தால் நினைக்கவும் கூடாது என்பதில் உறுதி கொண்டுள்ளாள் தலைவி.

4 comments:

  1. அறியாதன அறிந்தோம்
    அருமையான விளக்கம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. தும்மல் பற்றிய குறளும் விளக்கமும் அறிந்து வியந்தேன். அன்றைய நாளில் தும்முபவர்களை வாழ்த்துவது போலவே, இன்றும் மேலை நாடுகளில் எவராவது தும்மினால் அருகிலிருப்பவர் bless you என்று சொல்லும் வழக்கம் இருப்பதை அறிந்து இன்னும் வியப்புறுகிறேன். அறியாத செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமை ஐயா... ரசித்தேன்...

    அடுத்த குறளில் அவள் அழுதும் காரணத்தையும் சொல்லி இருக்கலாம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete