Thursday 16 May 2013

கேட்ட தாய்


 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்னும் குறள் பலரும் அறிந்தது. இதன் பொருள்: ஒரு தாய், தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்ல, அதனைக் கேட்டு அவனைப் பெற்றபோது தான் மகிழ்ந்ததைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். 

கேட்ட தாய் என்பதற்கு உரை ஆசிரியர் பரிமேலழகர், பின் வரும் விளக்கத்தை எழுதியிருக்கிறார்: "பெண் இயல்பால் தானாக அறியாமையின்" அதாவது, பெண்ணின் இயல்பு காரணமாய் அவள் தானாகவே தெரிந்துகொள்ள மாட்டாள், மற்றவர் சொல்லித்தான் அறிவாள்; ஆகையால், அறிந்த தாய் என்னாமல், வள்ளுவர் கேட்ட தாய் என்றார் என்பது பரிமேலழகரின் விளக்கம். 

பெண்ணுக்குச் சொந்த அறிவு இல்லை என்பது ஆணாதிக்க மனப்பான்மை எனக் குற்றம் சாற்றுவோர் உண்டு. வள்ளுவரை ஆதரிக்கிறவர்களோ அதற்குச் சமாதானம் சொல்கினறனர்; என்ன சொல்கின்றனர் 

எந்தத் தாய்க்கும் தன் மகனைக் குழந்தையாகவே கருதும் இயல்பு உண்டு; அவனுக்கு ஒண்ணுமே தெரியாது என்று தாய்மார்கள் கூறக் கேட்கிறோம் அல்லவா? இந்த இயல்புதான் தன்னுடைய பிள்ளையின் அருமை பெருமைகளைச் சரியாக எடை போடவிடாமல் தாயைத் தடுக்கிறது. இதைத்தான் வள்ளுவர் சொன்னார் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  

இரு தரப்பு வாதங்களில் நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்; கருத்துச் சுதந்தரம் இருக்கிறதே!

                                                  ----------------------------------------------

1 comment:

  1. அருமையான விளக்கம் ஐயா...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete