Monday, 12 March 2018

மாவீரர் இருவர்



   மகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்!

Heracles

  ஒருவன் Heracles (லத்தீனில் Hercules). தலைமைக் கடவுள் Zeus-க்கும் மானிடப் பெண்ணொருத்திக்கும் பிறந்த அவனுடைய 12 சாகசங்கள் பரவலாகத் தெரிந்தவை; ஆனால் அவனது முடிவு? சிலரே அறிவர்.

  அவனுடைய மனைவி Deianira–வைக் கவர்வதற்கு முயன்ற Nessus என்பவனை Heracles கொன்றான். அவன் சாகும்முன்பு, Heracles-க்குத் தெரியாமல், தன் ரத்தந்தோய்ந்த அங்கியை அவளிடந்தந்து, “அற்புத சக்தியுடையது; எப்போதாவது உன் கணவன் உன்னைப் புறக்கணித்தால், இதை உடுத்திக் கொள்ளச்சொல்; மனம் மாறுவான்” என்றான். அவள் பத்திரமாய்ப் பாதுகாத்துவந்தாள்.

  சில ஆண்டு கழித்து, Heracles வேறு பெண்ணை மணக்க முனைந்தபோது, Deianira அதைத் திருமணப் பரிசாய் அனுப்பிவைத்தாள்; அணிந்ததுதான் தாமதம், அதில் தடவியிருந்த கொடிய நஞ்சு வெகு விரைவாய் உடல் முழுதும் பரவித் தாங்கொணா வேதனை தரவே, கழற்ற முயன்றபோது, சதையும் பிய்த்துக் கொண்டு வந்த்து. தன் முடிவு நெருங்கிவிட்டதையுணர்ந்த Heracles மரக்கட்டைகளைத் தானே அடுக்கிக் கொளுத்தி மேலேறிப் படுத்தான். தீ நாக்குகள் தீண்டும் முன்பு Zeus தோன்றி மீட்டு அழைத்துச் சென்றார்.

  மற்றவன் Perseus.

Perseus

  அரசன் Aerisius-இன் மகள் Danae. இவள் பிறந்தபோது Appollo கடவுளின் பூசாரி அருள்வாக்கு சொன்னான், “இவளது மகன் தாத்தாவைக் கொல்வான்!” என்று.

  அவளைக் கன்னியாகவே வைத்திருக்கத் திட்டமிட்ட தந்தை ஒரு கோட்டையில் அடைத்துப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தான்.

  Zeus அவளை மனைவியாக்கிக் கொண்டார். Perseus பிறந்தான். கெட்ட செய்தியைக் கேள்விப்பட்ட வேந்தன் ஒரு மரப்பெட்டி தயாரித்துத் தாயையும் சேயையும் அடைத்து ஆற்றில் விட்டான்.
  
  ஒரு தீவில் தரைதட்டிய பெட்டியைக் கண்ட Dictys இருவரையுங் காப்பாற்றிப் பேணிவந்தான். தீவின் கொடுங்கோலன் Polydectes–இன் காமப்பார்வை Danae மீது படிந்தது. அவளை அவன் மணக்க விரும்பியபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் Perseus–ஐ ஒழித்துக்கட்ட எண்ணி Medusa–வின் தலையைக் கொண்டுவரும்படி அவனுக்குக் கட்டளையிட்டான்.

  அவன் திரும்பிவர மாட்டான் என்பது நிச்சயம். சாமான்ய வேலையா அது?

  பின்னிப் பிணைந்து தொங்கும் பாம்புகளாகிய கூந்தலும் நீண்ட வலிய பற்களும் உறுதிவாய்ந்த பருந்து நகங்களும் பொன் இறகுகளுங்கொண்ட பயங்கர அரக்கி Medusa. இவையல்லாமல் அபூர்வ சக்தியொன்று அவளுடைய கண்களுக்கு இருந்தது; பார்ப்பவரைக் கல்லாக்கிவிடும்!

  கடவுள் Athena, முகம் பார்க்குங் கண்ணாடி போல் பளபளப்பாக இழைக்கப்பட்ட கேடயத்தை அவனுக்களித்தது. அவன் Medusa–வின் கண்களை நேரிற் பார்க்காமல், கேடயத்திற் பிரதிபலித்த அவளது தலையைக் குறிவைத்து வெட்டியெடுத்துக் கொண்டான். அவளது சடலத்திலிருந்து வெளிப்பட்ட பறக்கும் Pegasus குதிரை மீது தாவியேறித் திரும்பி வருகையில் ஒரு பாறையில் பிணைக்கப்பட்டிருந்த மங்கை Andromeda–வைக் கண்டான். இளவரசியாகிய அவளை அவளது தகப்பன், மக்களையும் மாக்களையும் கொன்று தின்று அட்டூழியம் புரிந்துகொண்டிருந்த கடல் பூதத்துக்குப் பலியாய்க் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பூதத்தை Perseus கொன்று அவளை மணந்துகொண்டான்.

  Polydectes ஒழிந்தான், Danae பிழைத்தாள் என்பதைச் சொல்லவேண்டுமா?

  பின்னாளில், ஒரு விளையாட்டுப் போட்டியின்போது, Perseus விட்டெறிந்த இரும்பு வட்டு முதியவரொருவர் மேல் விழுந்து வாழ்வை முடித்தது; அவர் அவனது தாத்தா!

  Perseus, Andromeda, Pegasus என்று பெயர் சூட்டப்பட்ட விண்மீன் கூட்டங்கள் சப்தரிஷி மண்டலத்தின் அருகில் கண்சிமிட்டிக் கொண்டுள்ளன. சற்றுத் தொலைவில் Heracles.
  
(படங்கள் உதவி - இணையம்)

Wednesday, 10 January 2018

ஏன்?



   5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே! இதோ, பக்கத்தில், நீந்திக் கடக்கக்கூடிய சிறு கடலில் உள்ள தீவைத் தமிழர்கள் படித்துத் தங்கள் நாட்டுடன் சேர்த்திருந்தால் இன்று அங்கே நாம் சிறுபான்மையினராய் அவல வாழ்வுக்கு ஆளாகி அல்லல்பட நேர்ந்திராது அல்லவா? அப்படிச் செய்யாதது ஏன்?

   முடியாமைதான் காரணம்.

   சிங்களர்கள் சமமான வீரர்கள். அவர்கள் தமிழகத்துள் நுழைந்து சில பகுதிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

   நூல்: பாண்டியர் வரலாறு. ஆசிரியர்: சதாசிவ பண்டாரத்தார். பக். 79, 80;

   “இலங்காபுரித் தண்டநாயகன் பாண்டி நாட்டின் இராமேச்சரம், குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டு வந்த சிங்களப் படைக்கும் குலசேகரப் பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. இலங்காபுரித் தண்டநாயகன் பெருவெற்றி எய்தி, மதுரை மாநகரைக் கைப்பற்றினான். கீழை மங்கலம், மேலை மங்கலம், தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களும் அவன் வசமாயின.

   பாண்டியனுக்கு உதவியாய் வந்த சோழர் படைக்கும் சிங்களப் படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலிய ஊர்களில் நடைபெற்ற பெரும்போர்களில் சிங்களர் வென்றனர். இவர்களின் வெற்றி அந்நாள்களில் சோழ மண்டலத்திலும் பிற நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டது என்பது காஞ்சி மாநகரை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது.”

   வாசித்தீர்களா? பாண்டியன், சோழன் இருவரும் சேர்ந்தபோதிலும் தோற்றனர். பாண்டிநாடு முழுதும் இலங்கையின் பகுதியாகாமல் தப்பித்ததே தம்பிரான் புண்ணியம்! இந்த அழகில் இலங்கை மீது நாம் படையெடுப்பதாவது, கைப்பற்றுவதாவது!

   என்றாலும் சுமார் நூறு ஆண்டுக்குப் பின்பு, பாண்டியர் படை இலங்கை சென்று பல பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கி நகரங்களைக் கொள்ளையடித்து சுபகிரி என்னும் நகரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றியது. இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும்பொருளை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பிற்று. (மேற்படி நூல். பக். 109).


   உச்சக்கட்டச் சாதனை அவ்வளவுதான். முழுத்தீவையும் வசப்படுத்தப் போதிய படை வலிமையில்லை; கிடைத்த சிறு பகுதியையாவது காலனியாக்குவதற்குத் தேவையான வசதிகளோ organizing திறமையோ இல்லாமற் போயின. 

(படம் உதவி இணையம்)

Tuesday, 26 December 2017

நாள்காட்டி




  காலம் என ஒன்று இல்லை; இல்லாத ஒன்றைக் கணக்கிட வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலாய்ப் பழங்காலத்தில் சிலர்க்குத் தோன்றியதென்றால் அவர்கள் எவ்வளவு நுண்ணறிவாளராய் இருந்திருக்க வேண்டும்! பல்வேறு சமயங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளை நிரல்படுத்தவும் நினைவிற் கொள்ளவும் எதிர்காலத் திட்டங்கள் தீட்டவும் அப்படியொரு தேவையிருப்பதை யுணர்ந்து காலமானியை உருவாக்கிய அந்த அறிவாளிகள், இன்றைய ஈராக் நாட்டில் 5000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள்; அக்கால நியூட்டன்கள்!

   பிறை தோன்றும் வேளையைத் தொடக்கமாய் வைத்து, இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள், முப்பது நாள் கொண்டது ஒரு மாதம், பன்னிரண்டு மாதம் ஓர் ஆண்டு என்று அவர்கள் நிர்ணயித்து நாள்காட்டி தயாரித்தார்கள். 60 நிமிஷம் 60 நொடி என்னும் அளவுகளும் உலகுக்கு அவர்களின் கொடைதான்.

   சுமேரிய நாகரிகம் வீழ்ந்தபோது அவர்களது தயாரிப்பும் வழக்கொழிந்தது. அதை யடிப்படையாய்க் கொண்டு பிற்காலத்தில் எகிப்தியர் உண்டாக்கிய நாள்காட்டி சூரியோதயத்தைத் தொடக்கமாய் மாற்றியது. ஆண்டுக்கு 365¼ நாள் எனத் துல்லியமாய்க் கணக்கிட்ட பெருமை அவர்களைச் சாரும். அவர்களின் காலண்டரில் காணப்பட்ட குறையோன்றைப் போக்குவதற்குப் பொ.யு.மு.3-ஆம் நூற்றாண்டில் கோலோச்சிய எகிப்திய மன்னர் Ptolemy II நான்காண்டுக்கு ஒரு முறை, “ஆண்டுக்கு 366 நாள்என்று திருத்தஞ்செய்தார்; leap year இன்று வரை நீடிக்கிறது.

   எத்திசையும் புகழ் மணக்கச் செம்மாந்திருந்த எகிப்திய நாகரிகத்துக்கும் முடிவு வந்தது.

   அதன் பின்னர் ரோமானியர் காலங் கணக்கிட்டனர்; ஆனால் அதற்கான உரிமை மதத் தலைவர்களின் கையிற் சிக்கியமையால், அவர்கள் லஞ்சம் தந்தவர்களுக்குப் பதவிக் காலத்தை நீட்டித்தல், வரி வசூல் அதிகாரிகளுக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ தவணைகளைக் கூட்டல் அல்லது குறைத்தல் முதலிய முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொழுத்தார்கள். (ஊழலுங் கடவுள்தான்: ஆதி யந்தம் இல்லை). எல்லை மீறிய தகிடுதத்தங்களால் வசந்த விழாவை மழைக் காலத்திலும் கோடை அறுவடை விழாவைக் குளிர்பருவத்திலுங் கொண்டாட நேர்ந்தது. தில்லுமுல்லுகளை ஒழித்துக்கட்டக் கருதிய ஜூலியஸ் சீசர், அந்த உரிமையைப் பறித்ததோடு வானியல் வல்லுநரின் உதவியால் 365 நாள் அடங்கிய ஆண்டு கொண்ட காலண்டரை (லத்தீனில் Kalendae), பொ.யு.மு.46-இல் உருவாக்கி, லீப் ஆண்டையும் பின்பற்றச் செய்தார்.

   இதிலும் சில குறைகள் இருந்தமை காலப்போக்கில் தெரியவந்தது. அவற்றை நீக்குவதற்குப் போப்பாண்டவர் Gregory XIII (1502 – 1585), 1582-ஆம் ஆண்டில், இரு திருத்தங்கள் செய்தார்.

1.   அந்த ஆண்டில் 10 நாளைக் குறைத்தார். அக்டோபர் 4-ஆம் தேதி வியாழனுக்கு அடுத்த நாள் 15-ஆம் தேதி வெள்ளி ஆயிற்று.

2.   Kalendae–யில் இரு சுழிகளால் முடிகிற எல்லா ஆண்டுகளும் லீப் ஆண்டாய் இருந்தன. புது ஏற்பாட்டின்படி சுழிகளுக்கு முன்னால் உள்ள எண் 4-ஆல் மீதியின்றி வகுபட்டால்தான் லீப் ஆண்டு; ஆதலால் 1800,1900 முதலானவை லீப் ஆண்டல்ல.


  அவரது பெயரைத் தாங்கிய கிரிகோரியன் காலண்டர் இன்றைக்கு உலகு முழுதும் பயன்படுகிறது; ஆயினும் எங்கும் ஒரே காலத்தில் அமலுக்கு வரவில்லை. கத்தோலிக்க நாடுகள் விரைவில் ஏற்றன; புரோட்டஸ்டண்ட் நாடுகள் தயங்கின; ஒரு கத்தோலிக்கரின் கணக்கை எப்படி ஒப்புக்கொள்வது?

   வேறு வழியில்லாமையால் ஒவ்வொன்றாய்த் திருந்தின:

-    ஹாலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து 1700-இல் மாறின;

-    இங்கிலாந்தும் ஸ்வீடனும் 1752 வரை காலங் கடத்தியதால் 11 நாள் குறைக்க வேண்டியதாயிற்று; 1700-ஐ அவை லீப் ஆண்டாய்க் (366 நாள்) கடைப்பிடித்திருந்தன. இங்கிலாந்தில் 2-9-1752-க்கு அடுத்த தேதி 14-9-1752 என்று அரசு அறிவித்தபோது, அதிருப்தியாளர் கூட்டமொன்று தெருக்களில் கண்டன ஊர்வலம் நடத்திற்று, “எங்கள் 11 நாளைத் திருப்பித் தா!” என முழங்கியவாறு.

-    இருபதாம் நாற்றாண்டு வரைக்கும் தாக்குப் பிடித்த கிரேக்கம், பல்கேரியா, யுகோஸ்லேவியா, ரஷ்யா 13 நாள் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயின. 26-10-1917-இல் வெடித்த ரஷ்யப் புரட்சி ‘அக்டோபர் புரட்சி’ என வரலாற்றில் பதிவாயிற்று. அடுத்த ஆண்டு முதல் அதை நவம்பர் 7-இல் நினைவு கூர்கின்றனர். 24-10-1918-க்கு அடுத்த நாள் 7-11-1918 ஆகிவிட்டது!
  
 (ஆதாரம்: பிரெஞ்சு நூல் Le calendaier , ஆசிரியர் Paul Couderc)
 (படம் - நன்றி இணையம்)

   

Friday, 15 December 2017

தகவல் பலகை


 பாலயோகினியில் பேபி சரோஜா
படம் உதவி - இணையம்

 1.   75 ஆண்டுக்கு முன்பு பாலயோகினி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் நடித்த சிறுமி பேபி சரோஜா தான் தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம். மரக்குதிரை மீது அமர்ந்து, முன்னும் பின்னும் ஆடியபடி, தன் பொம்மையைப் பார்த்து,

  கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கித் தருகிறேன் நானே
  சோடா கலருடன் வேண்டிய பட்சணம் வாங்கித் தருவேனே

என அவள் பாடிய காட்சி பார்த்தவர்களைப் பரவசத்திலாழ்த்தி உள்ளத்தைக் கொள்ளை கொண்டமையால் அவளது போட்டோவை வாங்கிக் கண்ணாடி, சட்டம் போட்டுச் சுவரில் மாட்டி அழகு பார்த்தார்கள்.

  அந்தக் காலக் கட்டத்திற் பிறந்த பல பெண்களுக்கு சரோஜா என்று நிறையப் பேர் பெயர் சூட்டினர்; சிலர் பேபி சரோஜா என்றே பெயர் பதிந்தனர். இந்தக் குழந்தைகள் ஒரு பேபியைப் பெற்றெடுத்த பின்பும் ‘பேபி’ சரோஜாவாகவே நீடிக்க வேண்டியிருந்தது.

  திரையுலகில் இ.வி.சரோஜா, பி.எஸ்.சரோஜா, எம்.எஸ்.சரோஜா என மூன்று நடிகைகள் சமகாலத்தில் நடித்தார்கள்.

2.   வாடியென் கப்பக் கிழங்கே!’ எனத் தொடங்கிய தமிழ்த் திரைப்படப் பாடல் நினைவிருக்கும். கப்ப என்பது மலையாளம். தமிழில் குச்சிக்கிழங்கு, மையக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சவாரிக் கட்டை; இந்தியில் சிம்லா ஆலு (சிம்லா உருளைக்கிழங்கு)

  லட்சக்கணக்கான ஆப்ரிக்கரின் அன்றாட உணவாக இந்தக் கிழங்கு பயன்படுகிறது. உலக உற்பத்தியில் முன்னணி நாடு நைஜீரியா.

  ஜவ்வரிசி செய்யப்படுவது இக்கிழங்கிலிருந்துதான்.

3.    கும்மியடி பெண்கள் கும்மியடி
   கொங்கை குலுங்கவே கும்மியடி

என்ற பாடலைக் கேட்டதுண்டு, பார்த்ததில்லை; இன்றுதான் கண்டேன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கொங்கை குலுங்க மங்கையர் ஆடியதை. அநாயாசமாய், ஆனந்த பரவசமாய், சுதந்திரமாய், எது பற்றியுங் கவலைப்படாமல், என்னமாய் ஆடினார்கள்!

4.   மிகச் சிறு சிலந்தியொன்று உண்டு; வலை பின்னாது; நடந்து செல்லும். சுவரில், தரையில், ஈக்கள் மிகுந்துள்ள இடங்களிற் காணலாம். மெதுவாய் நகர்ந்து, ஓர் ஈயைக் குறிவைத்து அடிமேலடி வைத்து நெருங்கி, ஒரே பாய்ச்சல்! பிடித்துவிடும். ஈயின்மேல் புலி போலப் பாய்வதால் அது ‘ஈப்புலி’ எனப்படுகிறது.

5.   புதுச்சேரித் தாவர இயல் பூங்காவைப் பிரஞ்சு ஆட்சி 1826-இல் தோற்றுவித்தது. சுமார் 11 ஹெக்டார் பரப்பளவுள்ள இதில் ஏறக்குறைய 3000 உள்நாட்டு வெளிநாட்டு மரங்கள் வாழ்கின்றன.

6.   பழந்தமிழ் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ள சொல் ‘செவி’. நாம் அதைப் புறந்தள்ளிக் ‘காது’க்கு மாறிவிட்டோம். மலையாளம் செவி என்றே சொல்கிறது.

7.   நீதிபதியை ஏன் my lord என வழக்குரைஞர் விளிக்கிறார்?

  ஆங்கில ஆட்சியில் வைஸ்ராய், ஆளுநர், நீதிபதி முதலான உயர்பதவிகளில் பிரபு வம்சத்தில் பிறந்தவர்களே நியமிக்கப்பட்டார்கள். இப்போதும் லார்ட்ஸ் சபை இங்கிலாந்தில் உண்டு: மேற்பகுலத்தார் சபையாதலால் upper house எனப்படுகிறது; தமிழில் ‘மேலவை’

  நீதிபதி லார்டாய் இருந்தமையால் my lord என அழைத்தனர்; அந்த வழக்கம் இன்னமும் தொடர்கிறது. அதைக் கைவிட வேண்டும் என யாரும் சொன்னதாய்த் தெரியவில்லை. 

*********