Wednesday 5 March 2014

அற நூல்கள்




நான் அறிந்தவரை, ஆங்கிலத்திலோ பிரஞ்சிலோ அற நூல்கள் இல்லை. ஆனால்,  தமிழில் அவை ஏராளமாக இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? காலந்தோறும் நூல்கள் இயற்றி மக்களை நன்னெறியில் செலுத்த வேண்டிய தேவை இருந்ததா?   அந்த அளவு தமிழர் தறி கெட்டு வாழ்ந்தார்களா?   நான் அப்படி நினைக்கவில்லை. அற நூல் இயற்றுவது எளிது: புலமையும் யாப்பிலக்கண அறிவும் இருந்தால் போதும். கற்பனை இல்லாத புலவர்கள் எதை எழுதுவார்கள்அற நூலைத்தானே?

அத்தனை அற நூல்களின் போதனைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்: நன்மை செய்,  தீமைதவிர்.

"நன்மை புரிந்தால் நீ நன்மை அடைவாய்,  தீமை இழைத்தால் உனக்குத் தீங்கு உண்டாகும்". இதுவே விளக்கம். இதற்கு அடிப்படை எது? தன்னலம்! நான் நன்மை செய்தால் எனக்கு நன்மை,  தீங்கு செய்தால் எனக்குத் தீமை.

இதைச் செய்தால் புண்ணியம், மோட்சத்துக்குப் போகலாம்; அதைச் செய்தாலோ பாவம் சேரும், நரகத்தில் கிடந்து உழல வேண்டிவரும். இவ்வாறு ஆசை காட்டி, அச்சமூட்டி மனிதரை நன்னெறிப்படுத்த முயல்வது இந்தத்தன்னல அறத்தின் வழி.

இது ஒரு வகை அறம்; இந்தத் தன்னல அறத்தைக் காட்டிலும் சிறந்த வேறு வகை அறம் உண்டு; அது பிறர் நலத்தை நாடுவது: மனிதாபிமானம், சமத்துவக் குறிக்கோள், சுதந்தரவேட்கை, தியாகம், நாட்டுப்பற்று, விலங்குகளிடம் கருணை முதலானவற்றை அது போதிக்கிறது. 
பிரஞ்சுக்குடியரசின் தாரகமந்திரம்: சுதந்தரம்,  சமத்துவம், சகோதரத்துவம்.

டயரை எரிக்காதீர், அதனால் சுற்றுச்சூழலுக்குக் கேடு. மரக்கன்றுகளை நட்டு வளருங்கள்;  மழை வளம் பெருகும். இவை பொதுநல அறப்போதனைக்குக் காட்டுகள். வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார் முதலியோர் பற்பல இன்னல்களை அனுபவித்தது நாட்டுக்காக அல்லவா? அவர்கள் தன்னலம் துறந்து மகத்தான தியாகம் புரிந்தார்கள். அதுபோல, பொதுநலத்தை நாடும்படி குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

திறனாய்வாளர்கள் அறநூல்களைச் சிறந்த இலக்கியமாகக் கருதுவதில்லை; அவற்றில் கருத்து மட்டுமே உள்ளது;  இலக்கிய நயங்கள்  இருக்காது.  (திருக்குறள் மாத்திரம் விலக்கு). அவர்கள் உயர்தர இலக்கிய வகைகளாகக் கருதிப் போற்றுவது இதிகாசம்,  நாடகம், உணர்ச்சி மிகுந்த கவிதை, புதினம் ஆகியவற்றையே.  இவற்றுள் மிகுதியாக இயற்றப்படுபவை புதினங்கள்;  நோபல் பரிசும் தமிழ்நாட்டில் சாகித்திய விருதும் வழங்கப்படுவது புதினங்களுக்குத்தான்.

===========================
(படம்: நன்றி  இணையம்)

4 comments:

  1. சொன்னது அனைத்தும் உண்மைகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும் ஐயா... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாசித்தேன் ஐயா . எவ்வளவு சிரமப்பட்டு ஏராளத் தகவல்களைப் பிறர் நலத்துக்காகத் தந்திருக்கிறீர்கள் ! மனமாரப் பாராட்டுகிறேன் .

      Delete